கரூர்,அக். 30: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், அரவக்குறிச்சி தாலுகா சாலிபாளையம், ஆண்டிசங்கிலிபாளையம், குளிக்காடு, காளிபாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:
இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள சில கிரஷர் கல் குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி 50 அடி முதல் 100 அடி வரை பூமியில் 1 முதல் 200 துளைகள் (போர் குழிகள்) இட்டு, வெடிமருந்துகளை மொத்தமாக நிரப்பி, ஒரே நேரத்தில் வெடிக்க செய்கின்றனர். இந்த வெடி வெடிக்கும்போது, நில அதிர்வும் ஏற்படுகிறது. இதனால், வீட்டின் சுவர்கள் பாதிக்கப்படுகிறது. அதிகமான வெடிச்சத்தம் கேட்பதாலும் காற்று மாசடைகிறது. மேலும், துர்நாற்றம் காரணமாக, வயது முதிர்ந்தோர், குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்படுகின்றனர். அரசு விதிமுறைகளை மீறி அதிகப்படியான ஆழத்துக்கு கல் வெட்டி எடுத்து வருவதால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணறுகள் வற்றும் நிலை உள்ளது.