சென்னை, அக். 31: பழவேற்காட்டில் ₹27 கோடி செலவில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி மறுத்து சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் உள்ள கடல் முகத்துவாரத்தை நம்பி 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், பழவேற்காடு ஏரியும், கடலும் சேரும் முகத்துவாரப் பகுதி கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.குறிப்பாக, பழவேற்காடு ஏரியின் முகத்துவாரமானது ஒவ்வொரு பருவமழை காலத்தின்போதும் முற்றிலும் தூர்ந்து, பருவமழைக்கு பின்னர் தானாகவே வேறொரு இடத்தில் முகத்துவாரம் உருவாகிறது. இப்படி நிரந்தரமாக முகத்துவாரம் இல்லாத காரணத்தால் ஏரியின் மீன்வளம் குறைந்து மீனவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.எனவே, முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு தமிழக அரசு பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார ₹27 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவில்லை.இதனை கண்டித்து பழவேற்காட்டில் மீனவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே, நிரந்தரமாக முகத்துவாரம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்தது. அதன்பிறகு மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை சார்பில் ₹27 கோடி செலவில் ஐஐடி சென்னை உதவியுடன் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஒரு திட்டத்தை உருவாக்கி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிக்காக விண்ணப்பித்தது. இத்திட்டத்தின்படி, முகத்துவாரத்தின் இடதுபக்கம் 160 மீ, வலதுபக்கம் 150 மீட்டருக்கு பெரும் பாறைகளை கொட்டி சுவர் அமைக்கவும், இந்த சுவர்களுக்கிடையே 3 மீட்டர் ஆழத்திற்கு முகத்துவாரம் தூர்வாரி ஆழப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.