சேலம், அக்.26: சேலம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக அலுவலகத்திற்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், அதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சேலம் கிளை அலுவலகம், 5 ரோடு அருகேயுள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கிளை மேலாளராக பேபி உள்ளார். இந்த அலுவலகத்தின் இமெயிலுக்கு நேற்று முன்தினம் மாலை வந்த 2 மின்னஞ்சலில், ‘‘அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடிக்கும்,’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, அதன் மேலாளர் பேபி, பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய போது, வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. சைபர் கிரைம் பிரவு இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணையில், அந்த அலுவலகத்தின் இமெயிலில் இருந்தே வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டிருப்பது உறுதியானது.