ஓசூர் அருகே நடுரோட்டில் கள்ளக்காதலி கழுத்தை அறுத்து சரமாரியாக குத்திய வாலிபர்

ஓசூர்,அக்.17: ஓசூர் அருகே கழுத்தை அறுத்து பெண்ணை கொல்ல முயன்ற கள்ளக்காதலனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (36). கூலி தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மஞ்சுளாவிற்கும், சூடாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ராஜா என்ற ராஜசேகர் (35) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில், ராஜசேகரை தவிர்த்து, பாகலூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பவருடன் மஞ்சுளா நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராஜசேகருக்கு, மஞ்சுளா மீது ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று மாலை 3 மணியளவில், பெலத்தூர்-தாளப்பள்ளி சாலையில் மஞ்சுளா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராஜசேகர், மஞ்சுளாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவின் கழுத்தை ராஜசேகர் அறுத்தார். மேலும் உடலில் பல இடங்களில் குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதையடுத்து, அங்கிருந்தவர்கள் மஞ்சுளாவை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு போராடும் நிலை உருவானதால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாகலூர் போலீசார் ராஜசேகரை பிடித்து விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: