திருத்தணி, அக். 16: திருத்தணி அருகே தெக்கலூர் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றாததைக் கண்டித்து திருத்தணி, பொதட்டூர்பேட்டை சாலையில் தெக்கலூர் கிராம மக்கள் நேற்று காலை திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெக்கலூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெரு, பெரிய தெரு, பெருமாள் கோயில் தெரு மற்றும் புதிய தெரு, சென்ட்ரல் தெரு பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். பிள்ளையார் கோயில் தெரு தவிர, மற்ற தெருக்களில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படவில்லை. இதனால் இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பள்ளங்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துள்ளது. இதனால் கழிவு நீர் தடையின்றி செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கியுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.