பெரம்பலூர்,அக்.12: பெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளிலும் இன்று (12ம் தேதி) மக்கள் திட்டமிடல் இயக்கம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது என கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் இன்று (12ம்தேதி) மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு கிராமசபை கூட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அடுத்த ஐந்தாண்டில் கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவையனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு அவற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வழிவகைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் ஆலோசித்தல் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அடித்தட்டு மக்களையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும்.