குடியாத்தம் அக். 11: குடியாத்தம் ஒன்றியத்தில் அதிமுகவினருக்கு மட்டுமே இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என கிராமமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். தமிழக அரசின் சார்பில் இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி கிராமங்களி்ல் வசிக்கும் நிலமுள்ள, நிலமற்ற விவசாயிகளுக்கு தலா 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ கேட்டால் விண்ணப்பங்கள் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால், அந்த விண்ணப்பங்களை அதிமுகவின் ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.