நாகர்கோவில், அக்.10 : நாகர்கோவிலில் வியாழன்தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும் என்றும், அன்றைய தினம் ஆய்வு செய்து கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நகர் நல அலுவலர் கூறினார். வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. அதன்படி நாகர்கோவில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, பகவதி பெருமாள், ராஜா, ராஜேஷ், ஸ்ரீஜேஸ், ஜாண் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர். இந்த கூட்டத்துக்கு பின், நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் கூறியதாவது : கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையர் உத்தரவின் படி, நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 62 கள பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.