பொதுமக்கள் கோரிக்கை சிதைந்த பொன்நகர் சாலை சீரமைக்கப்படுமா?

அரவக்குறிச்சி. செப்.21: அரவக்குறிச்சியில், சின்னதாரபுரம் சாலையிலிருந்து பேருந்து நிலையம் வழியாக பொன்நகர் செல்லும் முக்கிய சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சியில் சின்னதாரபுரம் சாலையிலிருந்து பேருந்து நிலையம் வழியாக பொன்நகர் செல்லும் முக்கிய சாலை உள்ளது. இச்சாலை பொன்நகர், காமராஜ்நகர், ஜயாவு நகர், ராஜபுரம் செல்லும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் சின்னதாரபுரம் சாலையிலிருந்து பேருந்து நிலையம் வழியாக பொன்நகர் செல்லும் இணைப்பு சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். கற்கள் பெயர்ந்து கிடப்பதால் டூவீலர்கள் அடிக்கடி பஞ்சராகிவிடுகின்றன என பொதுமக்கள் புலம்புகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையில் சிதறிக்கிடக்கும் கற்களால் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். மேலும் அவசரகதியில் செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் இச்சாலையில் செல்வது மிகவும் கடினம். எனவே பொதுமக்கள் நலன்கருதி குண்டும் குழியுமாக உள்ள பொன்நகர் செல்லும் சாலையை உடனே சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: