மண்ணச்சநல்லூர், ஆக.14: திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் நேற்று ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் விசாலாட்சி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல்பெற்ற தலமாகும். திருமண தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் எம பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. அப்பர் சுவாமிகள் திருப்பைஞ்சீலியில் எழுந்தருளி உள்ள நீலிவனேஸ்வரரை தரிசிக்க திருப்பைஞ்சீலி நோக்கி சென்றபோது அவருக்கு களைப்பும், பசியும் ஏற்பட்டது. தன் பக்தர் ஒருவர் களைப்புற்று இருப்பதை உணர்ந்த நீலிவனேஸ்வரர் திருநீற்று அந்தணராய் வேடம் பூண்டு பசியை போக்க அப்பர் சுவாமிகளுக்கு கட்டமுது வழங்கினார்.