ஆவடி, ஆக.14: ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், குளக்கரை பிரதான சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடப்பதால் பாதசாரிகள் நடக்கமுடியவில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். ஆவடி நகராட்சி, 7வது வார்டான திருமுல்லைவாயலில், குளக்கரை பிரதான சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக மாடவீதிகள், எட்டியம்மன் நகர், வள்ளலார் நகர், அண்ணாநகர், திருவள்ளுவர் நகர், எஸ்.வி.டி நகர், மாசிலாமணீஸ்வரர் நகர், திருமுல்லைவாயல் காலனி, வெங்கடாச்சலம் நகர், ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும், இச்சாலையை அரிக்கம்பேடு, பொத்தூர், உப்பிரபாளையம், கொள்ளுமேடு, வெள்ளானூர், திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வர பயன்படுத்துகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், இச்சாலை வழியாக திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவில், சிவன் கோவில், எட்டியம்மன் கோவில், பெருமாள் கோவில் ஆகிய பிரசித்தி பெற்ற கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகிறார்கள் மேலும், இச்சாலையில் தனியார் பள்ளிக்கூடம், மருத்துவமனை, குடியிருப்புகளும் ஏராளமாக உள்ளன. இச்சாலையை தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், நோயாளிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.