சென்னை, ஆக. 13: மெட்ரோ ரயில் நிர்வாகம் வாக்குறுதி அளித்தபடி திரு.வி.க.பூங்கா பணியை விரைவில் தொடங்கா விட்டால் மெட்ரோ ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும், என்று மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பு எச்சரித்துள்ளது. மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் வெளியிட்ட அறிக்கை: சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவில் பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த பூங்காவில் மெட்ேரா ரயில் நிலையம் அமைக்கப்பட்டு, ஒராண்டாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் நிலம் கையகப்படுத்திய போது, பூங்காவில் உள்ள மரங்கள் எதையும் வெட்டாமல் இடம் மாற்றி வைத்து நன்கு பராமரிக்கப்படும், இயற்கை வளம் எதுவும் அழிக்கப்படாமல் ரயில் நிலையம் அமைக்கப்படும். ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, மீண்டும் திரு.வி.க. பூங்கா பழையபடியே பகுதி மக்களின் நடைப்பயிற்சிக்காக பயன்பாட்டிற்கு வரும் என்று உறுதியளித்தது. ஆனால் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் பூங்கா பயன்பாட்டிற்கு வரும் வகையில் அங்கு எந்தவித பணியும் துவங்கப்படவில்லை.