மயிலாடுதுறை, ஆக.13: காவிரி நீரை கொள்ளிடத்தில் திறக்கும் அதிகாரிகள் கடைமடைப் பகுதி வரை உள்ள குளம், குட்டை ஆறுகளிலாவது தண்ணீர் விட ஆவன செய்ய வேண்டும் என்று மயிலாடுதுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை காவிரி பாயும் கடைமடை விவசாயப் பகுதியாகும். இங்கேதான் காவிரி கடலில் கலக்கிறது. 2 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயமே பிரதான பணியாகும். நிலத்தடி நீர் மூலம் குறுவை சாகுபடி முடிந்து தாளடி மற்றும் சம்பாவுக்கு தயாராகிவரும் நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு நிறைவடைவதற்கு முன்பாகவே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலில் கலந்து வீணாகியது. மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள பாசன ஆறுகளில் ஆங்காங்கே கட்டுமானப்பணிகளை ஆளுங்கட்சியினர் செய்து வருவதால் அது பாதிக்கப்படக்கூடாது என்பதால் ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்படுவதை நிறுத்தியுள்ளனர்.