கோவை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் 43 வயது பெண். இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆனவர். இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இவர் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டப் படிப்புக்காக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வங்கியில் அதிகாரியாக பணியாற்றும் பாலக்காட்டை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளனர். அப்போது வங்கி அதிகாரி, ‘‘தானும் பி.ஹெச்.டி படிக்க வேண்டும். நீங்கள் எனக்கு உதவ வேண்டும்’’ என்று அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி படிப்பு விஷயமாக கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வந்து சென்றுள்ளனர். இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 பேரும் பாரதியார் பல்கலைக்கழகம் சென்றனர். அப்போது அந்த பெண்ணை வங்கி அதிகாரி காரில் உறவினர் வீட்டுக்கு செல்லலாம் என அழைத்து சென்றார். ஆனால், அங்கு செல்லாமல் காளப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு அறை எடுத்து இரண்டு பேரும் ஒன்றாக தங்கியுள்ளனர். அப்போது வங்கி அதிகாரி அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு அந்த பெண்ணுக்கு தெரியாமல் பலாத்காரம் செய்ததை அவர் தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்து இருக்கிறார்.
பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால், அந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இது குறித்து அந்த பெண் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வங்கி அதிகாரி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.