விருகம்பாக்கத்தில் உள்ள வக்பு வாரிய இடத்தில் இமாம், மோதினர்களுக்கு தங்கும் விடுதி: பிரபாகர ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர ராஜா பேசுகையில், ‘‘விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி வேம்புலி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான 3.35 சென்ட் இடம் இருக்கிறது. அதில் குளம் என்பது 2 ஏக்கரில் மட்டும் தான் இருக்கிறது. மீதி இருக்கக்கூடிய 1.35 சென்ட் காலி இடத்தில் அடக்கஸ்தலம் அமைக்க பரிசீலனை செய்ய வேண்டும்,’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசுகையில், ‘‘முதல்வரின் சிறப்பு திட்டமாக அரசு புறம்போக்கு நிலங்களில் கபஸ்தலம் மற்றும் கல்லறைகள் அமைக்க, அந்ததந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையினை மாவட்ட கலெக்டர்கள் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய இடங்களை பெற்று தருவது, அந்த பகுதியில் இடம் இல்லை என்று சொன்னால் தனியாருக்கு சொந்தமான இடத்தினை பேச்சு வார்த்தை மூலமாக பேசி, அந்தப் பங்களிப்பை அரசாங்கம் சார்பாக, துறை சார்பாக பங்களிப்பு அளிப்பதற்காக தலா ரூ.1 கோடி வழங்கியிருக்கிறார். எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

பிரபாகர ராஜா: மீதியுள்ள இடத்தில் அந்தத் தொகுதியில் உள்ள இமாம்களுக்கும், மோதினர்களுக்கும் தங்கும் விடுதி கட்டித்தரப்படுமா?. மேலும் இமாம்களுக்கு சிறுபான்மையினர் நலத் துறையின்மூலம் தரப்படும் மொபட் இன்னும் வயது வரம்பு நீட்டித்து தரப்படுமா?. இமாம்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியத்தை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய முதல்வர் வழங்கிக்கொண்டிருக்கிறார். அரசின் நிதி சுமைக்கேற்ப அதையும் உயர்த்தித்தரப்படுமா?. அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்: மொபட் மானியத்தோடு வழங்குவதற்கான நிதியினை ஒதுக்கி அளித்துள்ளோம். யார், யார் அதற்கு முன்வருகிறார்களோ அவர்களுக்கு அளித்து வருகிறோம். வயது வரம்பையும் இப்போது தளர்த்தி வழங்குவதற்காக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குளம் சீரமைக்கின்ற பணியும், அங்கே இருக்கின்ற பணியாளர்களுக்கு வீடு கட்டுகின்ற பணியும் தற்போது பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: