விழுப்புரம் மாவட்டத்தில் சுட்டெரிக்க தொடங்கியது கோடை வெயில்-வீட்டுக்குள் முடங்கிய பொதுமக்கள்

விழுப்புரம் : தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மழை மற்றும் குளிர் இருந்த நிலையில் தற்போது கோடை காலம் துவங்க உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கோடை வெயில் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் கோடையை எதிர்பார்த்துள்ளனர்.

இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கூறியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிவரை வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்ட நிலையில் விழுப்புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 93 டிகிரி முதல் 97 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது. கடந்த 2 நாட்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை முதலே நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி 97 டிகிரியையும் கடந்து வெயில் பதிவானது. இதனால் சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும், பெண்கள் துப்பட்டா மற்றும் சேலையால் தலையை போர்த்தியபடியும் சென்றதை காண முடிந்தது. தொடர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெரும்பாலானோர் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, கே.கே.ரோடு, எம்.ஜி.ரோடு, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கொளுத்திய வெயிலால் கானல் நீர் தோன்றியது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சாலையோரங்களில் கரும்புச்சாறு, நுங்கு, பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரிப்பழங்கள் விற்பனை செய்ய புதிது, புதிதாக கடைகள் முளைத்துள்ளன. இதனை வாங்கி பருகி பொதுமக்கள், வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தங்களை காத்து வருகின்றனர்.

இருப்பினும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே தற்போது வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் வாடி, வதங்கி வருகின்றனர். கத்திரி வெயில் காலம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

Related Stories: