திருப்போரூர் அருகே பஸ் மோதி மெக்கானிக் பலி

திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (30). இவர், திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு பைக் ஹோரூமில்  மெக்கானிக்காக வேலைப் பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடித்து மேகநாதன் வீட்டிற்கு தனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் சென்றபோது மாமல்லபுரத்திலிருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி வேகமாக வந்த ஒரு அரசுப் பேருந்து பைக் மீது மோதியதில் மெக்கானிக் மேகநாதன் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.

தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடியவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: