அண்ணாநகர்: கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகில், நேற்று மதியம் சுமார் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் கடும் ரகளையில் ஈடுபட்டனர். இதை பார்த்து, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விரைந்து வந்தனர். அவர்களைப் பார்த்தும், ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர். போலீசார், அவர்களை விரட்டி சென்று, ஒருவரை மடக்கி, பிடித்தனர். 9 பேர் தப்பி ஓடினர். பின்னர், சிக்கிய வாலிபரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், அவர் திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(19) என்பதும், பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் படித்து வருவதும், நேற்று பச்சையப்பன் கல்லூரியில் வள்ளல் பச்சையப்பரின் 229வது நினைவு தின விழா மற்றும் தமிழ் பசுமை தோட்டம் தொடக்க விழாவில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றதும், அதில் கலந்து கொண்ட மாணவர்கள் கல்லூரி முடிந்து விட்டு வீட்டிற்கு செல்லும்போது, அதே கல்லூரியை சேர்ந்த ரூட் தல என்பவர் பட்டாகத்திகளை கொடுத்ததும், அதை பையில் மறைத்து வைத்து கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வெற்றிவேலிடம் இருந்து 4 பட்டாகத்திகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இதுதொடர்பாக, வழக்குபதிவு செய்து
கல்லூரி மாணவர்கள் பட்டாகத்தியுடன் எதற்காக வந்தனர், கல்லூரி மாணவர்கள் இடையே முன்விரோதமா, அல்லது ரூட் தல பிரச்னையா என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய 9 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.