ஹிஜாவு நிறுவனம் ரூ.4,000 கோடி மோசடி 2 முக்கிய குற்றவாளிகள் கைது

சென்னை: தமிழகத்தில் ரூ.4 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்பட வட மாவட்டங்களில் ஹிஜாவு நிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினர். இதை நம்பி ஏராளமானவர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிறுவனம் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக், ஐஜி ஆசியம்மாள், எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர், இந்த நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் ராஜ் என்பவரை கைது செய்து, சிறையில் அடைந்தனர்.

இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி கஜலட்சுமி ஆகியோர் தலைமறைவாகி இருந்தனர். அவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரவிச்சந்திரன், ஐசிஎப்பில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மோசடி சொத்துக்களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: