அண்ணனை மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே ஆஹா ஓஹோ என்கின்றனர்: செல்லூர் ராஜூவை கலாய்த்த தங்கம் தென்னரசால் பேரவையில் சிரிப்பலை

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது செல்லூர் கே.ராஜூ பேசுகையில் ‘‘மதுரைக்கு எந்த ஒரு தொழிலும் இல்லை. மெட்ரோ ரயில் வேறு மதுரைக்கு வருகிறது என்று சொல்கிறார்கள். எந்த தொழிலும் இல்லாமல் மெட்ரோ ரயில் வந்து என்ன பிரயோஜனம்? எல்லாரும் பாராட்டக்கூடிய அளவிற்கு விரைவில் மதுரைக்கு ஏதாவது ஒரு தொழில் அமைச்சர் கொண்டு வர வேண்டும். ஆஹா... ஓஹோ... என தென்னரசை பாராட்டும் அளவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார். அப்போது  பேசிய சபாநாயகர் அப்பாவு, “பத்து வருடமாக அமைச்சராக இருந்துள்ளீர்கள்.

இப்போது வருத்தப்படுகிறீர்கள். இந்த அமைச்சராவது தருகிறாரா என பார்ப்போம்”, என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தென்னரசு, “மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை (செல்லூர் கே. ராஜூ) பார்த்து ஆஹா ஓஹோ என்கின்றனர். மதுரைக்காரர்கள் மாடு பிடிக்கு தான் பெயர் பெற்றவர்கள் என்பார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னாடி புலிவாலை பிடித்தபடி ஒரு படம் வந்தது. நானே அசந்து போனேன். மதுரைக்காரர்கள் விவரமாக இருப்பார்கள். ஆனால் புலி வாய் இருக்கும் பக்கம் நிற்காமல் புலி வால் இருந்த பக்கம் பிடித்திருந்தார்கள்.

அவ்வளவு திறமையாக இருக்கக்கூடிய அண்ணன் மதுரைக்கு கேட்டு இருக்கிறார்” என்றார். இந்த பேச்சால் முதலமைச்சர் உட்பட அவையில் இருந்த பலரும் சிரிப்பில் மூழ்கினர். தொடர்ந்து  அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘மதுரையில் டைடல் பார்க், சிப்காட் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை, தூத்துக்குடி தொழில் வழித்தடத்தில் வரிசையாக தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன. சமச்சீரான தொழில் வளர்ச்சி எல்லா மாவட்டங்களிலும் வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எனவே இப்போது வந்திருக்கக் கூடிய முதலீடுகள் அடிப்படையில் மதுரையும் அதில் முக்கியத்துவம் பெறும்”, என பதிலளித்தார்.

Related Stories: