சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட இருந்தது. அதில் சிங்கப்பூர் செல்ல வந்திருந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக்கொண்டு இருந்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த 2 ஆண்கள், சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணிகள் விசாவில் செல்ல வந்தனர். அவர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி உடைமைகளை முழுமையாக சோதித்தனர். அப்போது அவர்கள் சூட்கேசுகளில் ரகசிய அறைகள் வைத்து, அதனுள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை பெரும் அளவு மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.