கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் உள்ள தொன்னையன் கொட்டாய் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கணவனை இழந்த சரஸ்வதி (51). குழந்தைகள் இல்லை. நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, சரஸ்வதி இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இருந்த தனக்கு சொந்தமான இடத்தை ரூ.35 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதற்காக முதலில் ரூ.1 லட்சம் பெற்ற அவர், நேற்று முன்தினம் மீதி ரூ.34 லட்சத்தை பெற்றுள்ளார். வாடகை வீட்டிற்கு அருகிலேயே புதிதாக வீடு ஒன்று கட்டி வந்துள்ளார். இந்நிலையில்தான் சரஸ்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் வீட்டில் ரூ.35 லட்சம் வைத்திருந்ததை தெரிந்து கொலை செய்து பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என தெரிகிறது. எனவே உறவினர்கள் யாராவது கொலை செய்தார்களா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.