தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு

டெல்லி: தயிர் பால் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என அச்சிட வலியுறுத்திய அறிக்கையை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றது.

அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது தஹி என இந்தியில் எழுத ஒன்றிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியது.

ஆங்கிலத்தில் curd என எழுதி அதன் கீழ் தஹி என எழுதுமாறும், வேண்டுமானாலும் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தன.

இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது போல் தயிர் பாக்கெட்டுகளில் கூட இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது என தெரிவித்தன. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், இந்தியில் தஹி என்று அச்சிட முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

மேலும் தாய்மொழியை தள்ளி வைக்க சொல்வதாக உணவு தரம், பாதுகாப்பு அமைப்புக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்தார். குழந்தையை கிள்ளிவிட்டு சீண்டி பார்க்கும் நயவஞ்சகம் யாருக்கும் வேண்டாம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை  ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி பெயர் தேவையில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: