ஒரத்தநாடு எம்எல்ஏ ஆர்.வைத்திலிங்கம் (அதிமுக) பேசுகையில், ‘‘ஒரத்தநாடு தொகுதி 100 சதவீதம் விவசாயத்தை நம்பி இருக்கின்ற தொகுதி. அங்கு விளைகின்ற பொருட்களை மூலப் பொருட்களாக வைத்து சிறு தொழில் தொடங்குவதற்கு எடுத்துக்காட்டாக, அங்கே ஒரு சிட்கோ தொழிற்பேட்டை அமைத்துத் தர வேண்டும்” என்றார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்து பேசுகையில், ‘‘ஒரத்தநாடு பகுதியிலே உள்ள தொழில்முனைவோர்கள் தொழில் முனைவதற்கு வருகை தந்தால், அந்த தொழிற்பேட்டையில் இருக்கிற இடங்கள் ஒதுக்கீடு செய்து தரப்படும். ஆர்வமிக்க 20 தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க வேண்டுமென்று நினைத்து ஒரு 50 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி கொடுத்தார்கள் என்று சொன்னால், அரசின் மூலமாக 15 கோடி ரூபாய் மானியம் தந்து, அதை சீரமைத்து ஒரு தொழிற்பேட்டை உருவாக்கி, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அரசு செய்து தரும்” என்றார்.