குடிபோதையில் தகராறு 7 ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த 3 வாலிபர்கள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 7 ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி 1வது பள்ளத்தெரு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நள்ளிரவு நேரத்தில் ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடிகளை சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். நேற்று காலை அப்பகுதி மக்கள் எழுந்து பார்த்தபோது, தொடர்ச்சியாக அந்த தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆட்டோ உரிமையாளர்கள், வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் குடிபோதையில் 3 பேர் ஆட்டோ கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து காவாங்கரை பகுதியைச் சேர்ந்த அருண் (23), வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (23), அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (21) ஆகிய 3 பேரையும் நேற்று வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் வியாசர்பாடியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு வந்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 ஆட்டோ கண்ணாடிகளை குடிபோதையில் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனையடுத்து 3 பேர்மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: