சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவையாறு துரை.சந்திரசேகரன் (திமுக) பேசுகையில், “திருவையாறு தொகுதி, கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயிலுக்கு தேர் வழங்க அரசு முன்வருமா?’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: திருவையாறு தொகுதி, கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயிலுக்கு மரத்தேர் என்பது தற்போது கட்டு மரத்தேரில்தான் அந்த கோயிலுக்கு தேர் பவனி வருகிறது. அது இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு நீளமுள்ள பகுதியில் கட்டு மரத்தேரில் சுவாமி நிலையை அடைகிறது.
அந்த தேர் சுற்றி வருகிற பகுதி என்பது வெறும் 12 அடி கொண்ட குறுகிய சாலை என்பதால் அந்த 12 அடிக்குள் எவ்வளவு அளவில் தேர் செய்யமுடியுமோ அதை மரஸ்தபதியை வைத்து ஆய்வு செய்து அந்த குறுகலான பகுதியில் சுற்றி வருகின்ற தேரின் அளவை முடிவு செய்து, நிச்சயம் சாத்தியக்கூறு இருப்பின், உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும். இந்த ஆட்சி அமைந்த பிறகு சுமார் 31 தேர்கள் ரூ.21 கோடியில் அமைத்து கொடுத்த அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசு. உறுப்பினர் கோரிய மூன்று கோயில்களின் தேர்களில் இரண்டு கோயில்களுக்கு தேர் நிச்சயமாக செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.