பிளஸ்2 கணிதத்தில் சிபிஎஸ்இ பாட வினாக்கள் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் நடந்த மாநிலப் பாட திட்டத்தின்படியான 12ம் வகுப்பு கணிதப் பாட தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்துள்ளனர். கணித பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சிபிஎஸ்இ) கேட்கப்பட்டுள்ளன. மாநில பாட திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல.

கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100 சதவீதம் மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல. வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர் அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக்கூடாது. 12ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அவர்களுக்கு உரிய அளவில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: