மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததால் பாலிவுட் ஒளிப்பதிவாளர் உயிருடன் புதைத்து கொலை: கணவர், தந்தை, அண்ணன் கைது

மதுரை: மனைவியுடன் தொடர்பில் இருந்த பாலிவுட் ஒளிபதிவாளரை, எஸ்எம்எஸ் அனுப்பி வரவழைத்து உயிருடன்  புதைத்து கொலை செய்த கணவன் உள்பட 3 பேரை மதுரையில் போலீசார் கைது செய்தனர். மதுரை, ஜெய்ஹிந்த்புரம் அருகே மீனாம்பிகை நகரை சேர்ந்த பட்டதாரி சரவணமருது. பாலிவுட் சினிமாத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது குடும்ப நண்பராக இருந்த மாலதி என்ற பெண்ணுடன் நட்பாக பழகிவந்துள்ளார். மாலதிக்கு சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் திருமணமானது. எனினும் மும்பையில் இருந்து விடுமுறையில் வரும் போதெல்லாம் சரவணமருது, மாலதியுடன் தொடர்பை நீட்டித்துள்ளார். இது மாலதியின் கணவர் சக்திவேலுக்கு தெரியவே இருவரையும் கண்டித்துள்ளார். அதையும் மீறி இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு தனியாக சென்று சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து மாலதியின் தந்தை முருகன், அண்ணன் ராஜபிரபு ஆகியோரிடம் சக்திவேல் புகார் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, மதுரைக்கு விடுமுறைக்கு  வந்திருந்த சரவணமருதுவை கொலை செய்ய மூவரும் திட்டமிட்டனர். இதன்படி மாலதியின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்துச்சென்று, ‘‘மதுரை திருவாதவூர் சமத்துவபுரம் பகுதிக்கு நேரில் வாருங்கள்’’ என சரவணமருதுவிற்கு எஸ்எம்எஸ் அனுப்பினர். அதை நம்பி அவருக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பரிசுகளுடன் சமத்துவபுரத்திற்கு அவர் வந்தார். அங்கு மாலதியின் கணவர் சக்திவேல், தந்தை  முருகன், அண்ணன் ராஜபிரபு ஆகியோர் இருப்பதை பார்த்து தப்பி ஓட முயன்றார். அவரை சுற்றி வளைத்த மூவரும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி அருகேயிருந்த சுண்ணாம்பூர் கண்மாய்க்கு எடுத்து சென்று, குழி தோண்டி உயிருடன் புதைத்து விட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில், சரவணமருதுவின் தாய் ராஜேஸ்வரி கடந்த 14ம் தேதி ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தேடுதலை தீவிரப்படுத்தினர். இதில் மாலதியுடன் செல்போனில் மெசேஜ் மூலம் பேசி வந்தது தெரிந்தது. இதையடுத்து மாலதி மற்றும் அவரது கணவர் சக்திவேலை பிடித்து விசாரித்தபோது உயிரோடு புதைத்து கொலை செய்தது தெரியவந்தது. தகவலின்பேரில், சுண்ணாம்பூர் கண்மாயில் புதைக்கபடட்ட சரவணமருதுவின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து சக்திவேல், மாலதியின் தந்தை முருகன், அண்ணன் ராஜபிரபு ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: