போக்குவரத்துக்கழக ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகரில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் 20,300 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டுதோறும் சுமார் 1,200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வேளையில் காலிப்பணியிடங்கள் காலத்தே நிரப்பப்படாததால் போக்குவரத்துக்கான சேவையில் சிரமம் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு, அரசு போக்குவரத்தில் காலிப்பணியிடங்களை காலத்தே நிரப்ப முன்வர வேண்டும்.

அதே போல அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வினை நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்.  மேலும் நாளை(29ம் தேதி) நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில் தொழிலாளர்களின் நலன் கருதி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, சுமார் 90,000 தொழிலாளர் குடும்பங்களின் நலன் காத்து, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முன்வர வேண்டும்.

Related Stories: