நாகர்கோவில் : ‘தீவிர பெனடிக்ட் ஆன்றோ தலைமை ரசிகர்கள், குமரி மாவட்டம்’ என்ற பெயரில் திருமண விழாவில் கைது செய்யப்பட்ட குமரி ஆபாச பாதிரியார் படத்துடன் இளைஞர்கள் பிளக்ஸ் போர்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). பாதிரியாரான இவர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் பணியாற்றியுள்ளார்.
இவர் சில இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பேச்சிப்பாறையை சேர்ந்த 18 வயது நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அளித்த புகாரின் பேரில் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பெனடிக்ட் ஆன்றோ தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் பெண்கள் புகார் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பெனடிக்ட் ஆன்றோ இளம்பெண்களுடன் ஆபாசமாக இருப்பது தொடர்பாக படங்கள், வீடியோக்களை வெளியிட்டவர்களையும், பகிர்ந்தவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க பெனடிக்ட் ஆன்றோ படத்துடன் மீம்ஸ்கள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதற்கிடையே திருமண விழா ஒன்றில் ‘தீவிர பெனடிக்ட் ஆன்றோ தலைமை ரசிகர்கள், குமரி மாவட்டம்’ என்ற பெயரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ படத்துடன் களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து திருமண விழா ஒன்றில் மணக்கள் படத்துடன் பிளக்ஸ் போர்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதில் ‘ஊருல 10, 15 லவ்வர் வச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமாக இருக்கான், நான் பாவ மன்னிப்பு குடுத்தது எல்லாம் தப்பா டா’ , ‘என்னை விடுங்கடா நான் பாதிரியாரா போறேன்டே’, ‘மக்களுக்கு நல்லது செஞ்ச எனக்கு இந்த கதியா’ என்று ஒவ்வொருவரும் கூறுவது போன்று இளைஞர்கள் சேர்ந்து இந்த பிளக்ஸ் போர்டை வைத்துள்ளனர். நேற்று 27ம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் பிளக்ஸ் போர்டை கண்ட திருமண வீட்டிற்கு வந்தவர்கள் சற்றே அதிர்ச்சியும் அடைந்தனர்.மணமக்கள் படத்துடன் பிற இளைஞர்களின் படமும் இந்த பிளக்ஸ் போர்டில் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் போலீசார் மணமகன் மற்றும் பிளக்ஸ் வைத்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.