சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை பட்ஜெட் குறித்த விவாதத்தில் கே.வி.குப்பம் பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) பேசியதாவது: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கப்படும் நிதி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 95 சதவீதம் செலவிடப்பட்டது. ஆனால், 2021-22ம் ஆண்டு 83.19 சதவீதமும், 2022-23ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 37 சதவீதம் மட்டும்தான் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதி தொகை இந்த நிதியாண்டில் சேர்க்கப்பட வேண்டும்.
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்: ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து துறை பள்ளிகளும், பள்ளி கல்வி துறைக்கு கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜாதி ஒழிய வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இந்த நிதியாண்டில் ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 95 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு தாமதமாக நிதி வழங்கியதே காரணம். எந்த தொகையும் திருப்பி அனுப்பப்படவில்லை.