சென்னை: இ-சேவை மையங்களில் தற்போது 235 சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 600 சேவைகளை பெறக்கூடிய வசதி விரைவில் கொண்டு வரப்படும் என்று பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:
தொழில்நுட்ப வசதியின் மூலம் அரசின் திட்டங்கள் வேலை எளிய மக்களை சென்றடைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் தமிழக முழுவதும் 235 அரசு சேவை மையங்களும் 9 ஆயிரத்து 720 சேவை மையங்கள் மூலமாகவும் மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தகுதி உள்ளவர்களுக்கு இ-சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதற்கான குறியீடு, 234 சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக சேவை மையங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 85 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த குறியீடு பெற்று சேவை மையங்களை தொடங்கி உள்ளனர். தற்போது 235 சேவைகள் இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 600 சேவைகளை விரைவில் வழங்க உள்ளோம். கூடுதலாக ஒன்றிய அரசிடம் பேசி ஒன்றிய அரசின் திட்டங்களையும் இந்த இ-சேவை மையங்கள் மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.