தலின்(எஸ்தோனியா): உக்ரைனில் போரிட ராணுவத்தில் சேரும்படி கவர்ச்சிகர அறிவிப்புடன் ஆண்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன், ரஷ்யா போர் ஓராண்டை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்து விட்டனர். தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் தரை மட்டமாகி விட்டன. உக்ரைனின் பதிலடி தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்களும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனின் எல்லை நகரமான பாக்முட் நகரம் ரஷ்ய படைகளின் வசம் வந்துள்ளது. பாக்முட் நகரில் ஆற்றுபாலங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால், ரஷ்ய படைகள் மேலும் முன்னேறுவது மிகவும் கடினம் என்றும், இதனை பயன்படுத்தி உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தினால் ரஷ்ய துருப்புகளின் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ராணுவத்தில் சேரும்படி மாணவர்கள், வேலையின்றி உள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா இதற்காக ஆள்சேர்ப்பு மையங்களை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ராணுவ ஆள்சேர்ப்பு குறித்து அரசாங்க இணையதளங்கள், நூலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், சமூகவலை தளங்கள் உள்ளிட்டவைகளில் விளம்பரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. ராணுவத்தில் சேர்பவர்களின் மாத சம்பளம் ரூ.2 லட்சம், போனஸ் ரூ.3 லட்சம் என்பது உள்பட கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வௌியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 லட்சம் பேரை சேர்க்கும் முதல் ராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், தற்போது 2வது முறையாக ராணுவத்தில் சேர கவர்ச்சி திட்டங்களுடன் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இதற்கு கிரெம்ளின் மறுப்பு தெரிவித்துள்ளது.