குடிபோதையில் கணவன் தாக்கியதில் தலையில் அடிபட்ட மனைவி மருத்துவமனையில் மரணம்: கொலை வழக்கில் கணவன் கைது

சென்னை: குடிபோதையில் மனைவியை கீழே தள்ளி விட்டதில் தலையில் படுகாயம் அடைந்த மனைவி, மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் பிரேம்குமார் (37). இவரது மனைவி கோமதி (35). திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. குழந்தைகள் இல்லை. பிரேம்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

கடந்த 21ம் தேதி குடித்துவிட்டு வந்த பிரேம்குமார், வழக்கம்போல் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதுகுறித்து கோமதி புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பிரேம்குமாரை அழைத்து விசாரித்து, இருவரையும் சமாதானப்படுத்தி, பிரேம்குமாரை எச்சரித்து அனுப்பினர். பின்னர் வீட்டிற்குச் சென்ற பிரேம்குமார், கோமதியுடன் மீண்டும் சண்டைபோட்டு அவரை அடித்து, கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமதி மயங்கி கீழே விழுந்தார். பின்னர் பிரேம்குமார் அங்கிருந்து சென்று விட்டார்.

அப்போது வீட்டிற்கு வந்த கோமதியின் தாய், மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கோமதியின் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி கோமதி உயிரிழந்தார்.  இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். பின்னர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: