போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது

தண்டராம்பட்டு: போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ்நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென் முடியனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் குடிபோதையில் பள்ளி வாகனம், லாரி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை மடக்கி 2 பேர் தகராறில் ஈடுபடுவதாக தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று போதையில் தகராறில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜா(32), சந்தோஷ்(35) ஆகியோரை கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்தனர்.

தகவல் அறிந்த அவர்களது உறவினரான முன்னாள் பாஜ எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட துணை தலைவர்  மற்றும் அம்பேத்கர் சமூக எழுச்சி படை நிறுவனர் குபேந்திரன் மற்றும் தேமுதிக முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஏழுமலை உள்பட 10க்கும் மேற்பட்டோர் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் நுழைந்து எஸ்ஐ பச்சையப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். இதையடுத்து குபேந்திரன்(54), ஏழுமலை(46), முத்துவேல்(30), பிரகாஷ்(38), தங்கராஜ்(43) ஆகிய 5 பேரை காவலரை தரக்குறைவாக பேசியது, பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர், அவர்களை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: