சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் தெருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (41). அதிமுக பிரமுகர். இவர் ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணை செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் நேற்று இரவு கிளாய் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளார். இதில் விஜயகாந்த், கண்ணன் இரண்டு பேர் மது வாங்க, ஸ்ரீ பெரும்புதூர் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்த வந்து பார்த்தபோது நாகராஜ் கழுத்து, வயிற்றில் கத்து குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். அவருடன் வந்த 2 பேர் மாயமாகினர்.
இதையடுத்து விஜயகாந்த், கண்ணன் இருவரும் கொடுத்த தகவலின்படி, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில், கொலையான நாகராஜ், கிளாய் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குள்ளா என்கிற விஸ்வாவின் உறவினர் என்று தெரிந்தது. விஸ்வா மீது பல வழக்குகள் உள்ளன. மேலும் தற்போது விஸ்வா குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருந்தபடியே அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலித்து வருகிறார்.
பணத்தை நாகராஜ்தான் வசூலித்து கொடுப்பார். இந்நிலையில் நாகராஜ் சரியாக பணத்தை விஸ்வாவுக்கு கொடுக்கவில்லை என்ற கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கிளாய் பகுதியில் தொழிற்சாலை ஸ்கிராப் எடுப்பதில் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் விஸ்வாவின் காதலிக்கும் நாகராஜுக்கும் தொடர்பு இருந்ததாகவும் இது விஸ்வாவுக்கு தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் எந்த காரணத்துக்காக யார் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடி வருகின்றனர்.