வீடு புகுந்து பெண் பலாத்காரம் நிறுவன அதிகாரிக்கு 10 ஆண்டு சிறை

கோவை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான பெண், கோவையில் வசித்து வந்தார். டெய்லராக வேலை செய்து வந்தார். உடல் நலம் பாதிப்பு காரணமாக இவர் திருமணம் செய்யாமல் இருந்ததாக தெரிகிறது. இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் இருந்து வருகிறார். தனது சுய உதவி குழுவுக்கு கடன் வாங்குவது தொடர்பாக அடிக்கடி கோவை ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்று வந்தார். அப்போது, அங்கு மேலாளராக வேலை செய்து வந்த கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த பரமசிவம் (40) என்பவர் அந்த பெண்ணுக்கு அறிமுகம் ஆனார். இவர், பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி நள்ளிரவு அந்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென வீட்டுக்கு வந்த பரமசிவம், அந்த பெண்ணை கட்டிப்பிடித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பரமசிவம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட பரமசிவத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: