பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர்: விசாரணையின் போது எஸ்கேப்

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகளுடன் பெரம்பலூரில் வசித்து வந்த இவருக்கு, சிறுவாச்சூர் அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதைத் தொடர்ந்து அந்த மாணவியை, பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பிரபாகரன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார். தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர் திடுக்கிட்டனர். இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது, போலீஸ்காரர் பிரபாகரனுடன் ஏற்பட்ட பழக்கத்தால், தான் கர்ப்பமானதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில், மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில், அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், விடுமுறையில் சிறுவாச்சூர் வந்திருந்த போலீஸ்காரர் பிரபாகரனை நேற்று மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பிரபாகரன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். காவல் நிலையத்திலிருந்து தப்பி வந்து, வெளியில் தயாராக இருந்த நண்பருடன், இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரை மகளிர் போலீசார் துரத்திச் சென்ற போதும், பிடிக்க முடியவில்லை. இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். மேலும், அவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பி ஓடிய பிரபாகரனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: