வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை- வேடசந்தூர் சாலையில் உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (20). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 3 தினங்களுக்கு முன் வடமதுரை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திய பின் போதை தலைக்கேறியதும், சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவனை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சிறுவனின் உடலில் பல இடங்களில் கடித்து காயப்படுத்தி உள்ளார். இதுபற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என சிறுவனை மிரட்டி உள்ளார். அதன்பின்னர் வீடு திரும்பிய சிறுவன் சோர்வாக இருப்பதை கண்டு பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, தனக்கு நடந்த கொடுமையை சிறுவன் அழுது கொண்டே கூறியுள்ளான். இதுகுறித்து புகாரின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் மனோஜ் குமாரை கைது செய்தனர்.