சென்னை: ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் பாஜ அலுவகலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று வடசென்னை, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் அக்கட்சியினர் சத்தியமூர்த்தி பவன் முன்பாக ஒன்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து சென்னை, தி.நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகம் நோக்கி சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.