ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம் இன்ஜினியர் தற்கொலை

ஆலந்தூர்: கீழ்க்கட்டளை குமரன் நகரை சேர்ந்தவர் பரணிதரன் (32). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பரணிதரன் சேப்டி இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். ஆன்லைன் டிரேடிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், தான் செய்துவந்த வேலை விட்டுவிட்டு முழுமையாக ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால், அதை ஈடுசெய்ய தனது மனைவியின் நகைகளையும் விற்றுள்ளார்.  இதனால் கணவன் மற்றும் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டு, மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், பரணிதரன் தாயார் விஜயலட்சுமி கடந்த 22ம் தேதி தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக செஞ்சிக்கு சென்றுள்ளர். அங்கிருந்து நேற்று காலை  வீடு திரும்பியபோது, மகன் பரணிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  தகவலறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார், பரணிதரன் சடலத்தை கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: