ஜல்லி கற்கள் பரப்பி 2 வாரங்களாகிய நிலையில் தார் சாலை அமைப்பது எப்போது?..பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே  சாலை அமைக்க ஜல்லி கற்கள் பரப்பி 2 வாரத்துக்கு மேலாகியும் இதுவரை தார் சாலை அமைக்க வில்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் பிரதான சாலையில், சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் பரப்பி 2 வாரத்துக்கு மேலாகியும் இதுவரை தார் சாலை அமைக்கவில்லை. இதனால், அனைத்து தரப்பு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர், மாடம்பாக்கம், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை எளிதில் கடப்பதற்காக கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலம் கீழ் உள்ள சுரங்க பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே பழைய பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்குள்ள பிரதான சாலையை தார்சாலையாக அமைப்பதற்காக கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன.

ஆனால், ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு இரண்டு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஜல்லி கற்களின் மேல் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல், பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செல்வோரின் டயர்கள் பஞ்சராகி விடுகின்றன. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் தலையிட்டு மேற்படி பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: