அஜித்தின் தந்தை மரணம்

சென்னை: அஜித்தின் தந்தை சுப்ரமணியன் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார்.  இதுதொடர்பாக அஜித், அவரது சகோதரர்கள் அனுப் குமார், அனில் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் அப்பா பி.எஸ்.மணி (85) பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்த, எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அஜித் அப்பாவின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அஜித்தை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் விக்ரம் டிவிட்டரில் அஜித் அப்பா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் நடிகர் அஜித்குமார் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:  நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

Related Stories: