செஞ்சி அருகே தகாத உறவால் கணவரை கொலை செய்ய முயற்சி-மனைவி, காதலன் கைது

செஞ்சி : செஞ்சி அருகே தகாத உறவால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் கழுத்தை வெட்டி கொலை செய்ய முயற்சித்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (34), இவரது மனைவி சுசீலா (27), இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இந்நிலையில் இவரது கணவர் சத்யராஜ் சென்னையில் வேலை செய்து வருகிறார்.

சத்யராஜ் மனைவி சுசிலாவும் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ஜானகிராமன் (28) என்பவரும் திருமணத்திற்கு முன் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் காதலுக்கு சுசீலாவின் கணவர் தடையாக இருந்ததாகவும், அதனால் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்காக காதலன் ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார்.

கணவர் சத்யராஜும் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் நாட்டார் மங்கலத்தில் இருந்து மனைவி சுசீலா தனது மோட்டார் சைக்கிளில் கணவர் சத்யராஜை ஜம்போதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மொடையூர் மேம்பாலம் வழியாக வந்தபோது அங்கு மறைந்திருந்த காதலன் ஜானகிராமன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி கத்தியை எடுத்து சத்யராஜின் கழுத்தில் வெட்டியுள்ளார். சத்யராஜ் வெட்டுபட்டு மயங்கிய நிலையில் அவரது மனைவி சுசீலாவும் காதலன் ஜானகிராமனும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

வெட்டுபட்டு மயங்கி விழுந்து கிடந்த சத்யராஜை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் செஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சத்யராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சத்யராஜ் மனைவியும் அதே ஊரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரும் காதலித்து வந்ததாகவும், காதலுக்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மனைவி சுசீலா கணவரை தீர்த்து கட்டிய பின் காதலனுடன் சேர்ந்து வாழலாம் என முடிவு செய்து ஜானகிராமனை ஓசூரில் இருந்து வரவழைத்து கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமானது.

இதுகுறித்து சத்யராஜின் தந்தை கணேசன் செஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் சத்யராஜின் மனைவி சுசீலா மற்றும் காதலன் ஜானகிராமன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: