ரூ.55 லட்சம் மதிப்பு தங்க பசை பறிமுதல்: திருச்சி பயணி கைது

மீனம்பாக்கம்: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1.07 கிலோ தங்கப்பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கப் பசையை கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, திருச்சியை சேர்ந்த ஒரு பயணி, சுற்றுலா விசாவில் துபாய்க்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவருடைய உடமைகளை சோதித்த போது அதில் எதுவும் இல்லை.

ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து, முழுமையாக சோதித்தபோது, அவருடைய உடலில் மூன்று சிறிய பார்சல்களை டேப் போட்டு ஒட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த சிறிய பார்சல்களை எடுத்து பிரித்தபோது, அதனுள் தங்கப் பசை இருந்தது. மூன்று பார்சல் களிலும் ஒரு கிலோ 70 கிராம் தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.55 லட்சம். சுங்க அதிகாரிகள் தங்கப் பசை பார்சல்களை பறிமுதல் செய்ததோடு, நூதனமான முறையில் தங்கப்பசை பார்சல்களை கடத்தி வந்த பயணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: