சென்னை: பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டமுன்வரைவு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்படவிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. சட்டமுன்வரைவு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அதை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. பா.ம.கவின் வலியுறுத்தலை ஏற்று சட்ட முன்வரைவை அரசு மீண்டும் தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சட்ட முன்வரைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் தாமதிக்காமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.