சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேறியது. ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு பேசி இருந்தார். மேலும்,ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. மனித உயிர்களை பழிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது, இருக்கவும் கூடாது.ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும். இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது, அநியாயம் தொடரக்கூடாது. அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். என்று பேசினார்.