புழல் சிறையில் போலி வக்கீல் கைது: போலீசார் விசாரணை

புழல்:புழல் சிறையில், போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் சிறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 9-ம் தேதி மோசடி வழக்கில் ரவி(57) என்பவரை கைது செய்து, சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று மதியம் புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ரவியைச் சந்திப்பதற்காக வழக்கறிஞர் ஒருவர் வந்துள்ளார். அப்போது சிறை பெண்காவலர் இன்பா, வழக்கறிஞரின் அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்தார். அடையாள அட்டையை பார் கவுன்சில் இணையதளத்தில் சோதனை செய்ததில், வேறொரு வழக்கறிஞரின் பெயர் இருந்தது தெரியவந்தது. உடனே பெண் சிறைக்காவலர் போலி அடையாள அட்டையுடன் வந்த போலி வழக்கறிஞரை பிடித்து, புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

புழல் போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆதம்பாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்த ஸ்டாலின்(38) என்பதும்,  வேலை இல்லாத இவர் போலி வழக்கறிஞர் அடையாள அட்டையை வைத்து கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் ஸ்டாலின் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் வேறு ஏதேனும் மோசடி, மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி புழல் சிறையில் கைதியைச் சந்திக்க கொலை வழக்கில் தொடர்புடைய போலி வழக்கறிஞர் சதீஷ்குமார் வந்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மேலும் ஒரு போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சிறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: