அண்ணாநகர்: கோயம்பேடு புதிய மேம்பாலத்தில் பைக்கில் அசுரவேகத்தில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலியானார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் பைக்கில் அசுரவேகத்தில் சென்ற வாலிபர், நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.