முன்விரோதம் காரணமாக வாலிபர் சராமாரி வெட்டிக்கொலை: தந்தை, மகன் கைது

சென்னை: காஞ்சிபுரத்தில் முன்விரோத காரணமாக பட்டதாரி வாலிபரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த தந்தை, மகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மூன்றாம் கால் திருவிழா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தமிழ்வாணன் (24). பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சதாவரம் பகுதியில் உள்ள தன்னுடைய நண்பர் தினகரனை பார்க்க இவர் பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளார்.

சதாவரம் வேகவதி ஆற்று பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, 3 பேர், தமிழ்வாணனை வழிமறித்து கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.  இதில், பலத்த காயமடைந்த தமிழ்வாணன் அலறித்துடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தமிழ்வாணனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தமிழ்வாணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, மருத்துவமனை சார்பில், காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தமிழ்வாணனின் உடலை மீட்டு, பிரே பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சதாவரம் காந்தி நகரை சேர்ந்த குணசேகரன் மற்றும் அவரின் தந்தை ரகு ஆகிய 2 பேரும், முன்விரோதம் காரணமாக தமிழ்வாணனை கத்தியால் வெட்டி கொலை செய்ததும், ஏற்கனவே ரகு, குணசேகர் மீது 4க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், தந்தை, மகன் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: